Monday, January 10, 2011

கம்ப்யூட்டரை 20 மடங்கு வேகமாக இயங்க செய்யும் நுண்கருவி : பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை

லண்டன் : கம்ப்யூட்டரை 20 மடங்கு வேகமாக இயங்க செய்யும் நுண்கருவியை (சிப்செட்) பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர்களின் வேகத்தை பன்மடங்கு அதிகரிப்பது குறித்து, பிரிட்டனை சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தற்போதுள்ள நுண்கருவிகளை விட, 20 மடங்கு அதிக வேகத்தில் கம்ப்யூட்டரை இயங்க செய்யும் வல்லமை படைத்த புதிய நுண்கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் வான்டர்பவ்டே கூறியதாவது: தற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் "பிராசசரில்' உள்ள நுண்கருவிகள் இரண்டு, நான்கு அல்லது 16 வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் படைத்தது.

ஆனால், புதிய நுண்கருவி 1,000 செயல்பாடுகளை தனித்தனியே செய்யும் வல்லமை படைத்தது. இந்த நுண்கருவி பொருத்தப்பட்ட "பிராசசர்' ஆய்வக சோதனையில், ஒரு வினாடியில் ஐந்து ஜிகாபைட் (ஜி.பி.,) தகவல்களை பரிமாறும் திறனை வெளிப்படுத்தியது. சாதாரண நுண்கருவிகள் அடங்கிய "பிராசசரை' விட, இந்த புதிய நுண்கருவி பொருத்தப்பட்ட "பிராசசர்' கம்ப்யூட்டரை 20 மடங்கு அதிக வேகத்தில் இயங்க செய்தது.

இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்பட்டால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும் ஏற்படும் காலதாமதங்கள் தவிர்க்கப்படும். மேலும், சாதாரண நுண்கருவிகளை விட இந்த நுண்கருவி, குறைந்த மின்சாரத்தை நுகர்வதால், சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்ததாக அமையும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்படும். இவ்வாறு வான்டர்பவ்டே கூறினார்.

No comments:

Post a Comment