Tuesday, January 18, 2011

அழிந்துபோன 'மெமத்' இனம் மீண்டும் நான்கு வருடங்களில்: சாத்தியமா? (பட இணைப்பு)




  சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அழிந்த விலங்கினமான 'மெமத்' இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே இவ்வாறு ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளவராவார். இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.




இவ்வாராய்ச்சிக்கு பொருத்தமான கருவினைத் தேடி சைபீரியாவிற்கு செல்லவுள்ளதாகவும் அகிரா தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சைபீரிய நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்துபோன மெமத்தின் உடல் தோல் மற்றும் தசை திசுக்களிலிருந்து கருவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியானது தோல்வியடைந்தது. கடும் குளிரினால் கருவானது சிதைவடைந்திருந்தமையே அதற்கான காரணமாகும்.

ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட 16 வருடங்களுக்கு முன் இறந்த எலியொன்றின் கலத்தின் மூலமாக குளோனிங் முறையிலான எலியின் உருவாக்கமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.





இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்பிக்கையின் பிரகாரமே சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன இனமொன்றினை மீண்டும் உருவாக்க முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவிற்கு முன் 10,000 ஆண்டளவில் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் வாள் நட்சத்திரம் ஒன்று பூமியில் மோதியால் ஏற்பட்ட தீயினால் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படுகின்றது.


No comments:

Post a Comment